Wednesday 29 September, 2010

நாளைய தீர்ப்பு

                                       
நாளைய தீர்ப்பு- நாடே எதிர்பார்க்கின்ற தீர்ப்பு. காசு பணத்திற்கு, வயல் வாய்க்காலுக்கு, குற்ற குறைபாடுகளுக்கு  நடுவர் தீர்ப்பை காணலாம். மனித உணர்வுகளுக்குமா தீர்ப்பு? மனித நேயத்தோடு அணுகவேண்டியதை சட்டத்தின் மூலமாக ஓர் தீர்வா? அரசியலும் ஆன்மீகமும் தள்ளி நின்றாலே சர்ச்சைக்குள்ள இடத்தை சார்ந்த சமானிய மக்களே இன்றும் சகோதர பாசத்தோடு இருக்கின்ற மனிதநேய உறவுகளே நல்ல தீர்ப்பை காண்பார்களே! எல்லா நதியும் சென்று சேர்வது சமுத்திரமே. நதி ஓடுகின்ற பாதையின் மண்ணின் தன்மையைப் பொறுத்து அதன் சுவை வேறுபடலாம். கடலில் கலந்தபின் அனைத்தும் ஒரு சுவைதானே. மார்க்கம் பலவாயினும் சென்று சேருமிடம் ஒன்று தானே.
எனது இந்திய உலக உறவுகளே தீர்ப்பு எதுவாகினும் அனைவரும் ஒருதாய் மக்கள் பாரததாயின் பிள்ளைகளே என அமைதி காத்து அரசியல் ஆன்மீகவாதிகளை புறம் தள்ளி ஒற்றுமை காண்போம்.
                    

Monday 27 September, 2010

ஆசை கொள்

ஆசைப்படு-அனைத்தின் மீதும் ஆசைப்படு. ஆசையே  அனைத்து துன்பத்திற்கும் அடிப்படை ஆகவே ஆசையை ஒழித்து விடு என்றார் புத்த மகான். கனவு காண் என்றார் மரியாதைக்குரிய கலாம். ஆனால் ஆசையை ஒழித்தலும் கனவு கண்பதும் வாழ்க்கையில் முன்னேற்றம் காண வழிவகுக்காது.  எனவே ஆசைப்படு. பதவி மேல் ஆசைப்படு. ஆம் பதவி மேல் ஆசைப்படு.

பதவி- பதவி என்று நான் குறிப்பது.
1 ப- பசித்திரு;  ஆம் எப்பொழுதும் பசித்திரு. பசித்தால்தான் உணவு தேடும் முயற்சி உன்னிடம் உருவாகும். இங்கு பசி என்று குறிக்கப்படுவது வயிற்று பசி அல்ல. அறிவு பசி. அறிவு பசிக்கு முடிவே கிடையாது. முடிவு இல்லாதவரை உன் தேடல் தொடரும் தொடர வேண்டும்.

2-த-- தனித்திரு.-ஆம் தனித்திரு. ஆயிரம்பேர் இருக்கும் இடத்திலும் உன் இருப்பு தனியாக தெரிய வேண்டும். அதாவது அவையத்துள் முந்தியிருப்பச்செயல் என்ற வள்ளுவன் வாக்குக்கிணங்க தனித்தன்மையோடு  விளங்கவேண்டும்.

3-வி--விழித்திரு;- ஆம் எப்பொழுதும் விழித்திரு. உன்னைச்சுற்றி நடப்பதை உன்னிப்பாக கவனித்து அதன் நன்மை தீமைகளை ஆராய்ந்து நல்லவைகளை உட்கொண்டு அல்லவைகளை தவிர்த்து செயல்பட எப்பொழுதும் விழித்திரு.

இவ்வாறு நீ அறிவு பசியோடு தேடினால்-  தனித்து உன்னை காட்டினால்  உன்னை சுற்றி நடப்பனவற்றை விழிப்போடு கண்டு செயல் பட்டால் பதவி
என்ற வெற்றியை நீ அடையலாம்

அறிமுகம்

அன்பு நண்பர்களே- உங்களோடு என் எண்ணங்களை பகிர்ந்துகொள்ள விழைகின்றேன்.  ஆன்மீகம், அரசியல், இலக்கியம்,கவிதை, கட்டுரைகள்,சமுதாய தாக்கம் என பல முனைகளிலும் என் எண்ணங்களை உங்களோடு அலசி ஆராய விரும்புகின்றேன். நான் அரசு துறை (மக்கள் நலத்துறை) யில் பணிபுரிந்து பணி நிறைவு பெற்றவன்.ஆண் பெண் என இரு நன் மக்களை பெற்று  இருவரும் பணிநிமித்தமாக வெளிநாட்டில் உள்ளனர்.ஆவலோடு உங்கள் கருத்துகளை காண வேட்கையோடு வருகின்றேன். நன்றி. மீண்டும் சந்திப்போம்.